யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

அழகிற்கு இலக்கணம் கற்பிக்க
நினைப்பவர்கள் முட்டாள்கள்
அழகை வரையறுக்க முயல்பவர்கள்
ரசனை அற்றவர்கள்

மீன் போன்ற கண்ணே
மேலானது என்பவர்கள்
உருண்டை கண்
உருட்டலில் உழலாதவர்கள்

சீரான பற்களே
சிறப்பென நினைப்பவர்கள்
தெத்து பல் பெண்களின்
சிரிப்பில் சிக்காதவர்கள்

வெளிர் நிறமே உயர்ந்தது
என பேசுபவர்கள்
கருப்பு மங்கையரின் அழகில்
காணாமல் போகாதவர்கள்

நெடிய கூந்தலே சிறந்தது
என வாதிடுபவர்கள்
சுருட்டை முடி அலைகளில்
நீந்த தெரியாதவர்கள்

உயரமான பெண்களையே
உயர்த்தி பிடிப்பவர்கள்
குட்டை பெண்ணின் முகம்
நெஞ்சில் புதைவதை ரசிக்காதவர்கள்

சிறுத்த இடையை
சிலாகித்து பேசுபவர்கள்
இடுப்பு மடிப்புக்களில்
மயங்கி போகாதவர்கள்

மாசற்ற முகத்தை
முன் மொழிபவர்கள்
கழுத்து தேமலுக்கும் உதட்டு
மச்சத்திற்கும் மடியாதவர்கள்


Nov 19, 2014

தாத்தா

தாய் கொடுத்த தாய்ப்பாலு
இப்போ எனக்கு நினவில்ல
தாத்தா நீ ஊட்டுன சோறு
நெஞ்சு குழியில் நிக்குதையா

சின்ன வயசுல தாய் மடியில்
தூங்கியதா எந்த நினப்பும் இல்ல
தாத்தா உன் தோளில் நீ தட்டி
தூங்கியது மனச விட்டு நீங்கலையே

சாமி வந்து சொல்லுச்சுன்னு
மீனும் கறியும் நீ விட்ட
என் சாமி உனக்காக தானே
அதையெல்லாம் நானும் விட்டேன்

கோடி கணக்குல சொத்து
வச்சிட்டு போகவில்ல.. ஆனா
அன்பையும் ஒழுக்கத்தையும்
கத்து கொடுத்துட்டு போயிருக்க

உன் கடைசி காலத்துல 
வயசான உடம்பு தானே
வயித்தியம் போதுமுன்னு
பாவிப்பய நெனசுட்டனா

ராசா போல என வளத்தியே
உன் இறுதி ஊர்வலத்துல
உன்ன ராசப்போல் நான்
அனுப்பி வைக்கலையோ

நாங்க நல்லா இருந்தா நீ
நல்லா இருப்பனு சொல்லுவியே
நாங்க ரொம்ப நல்லா இருக்கையிலே
எங்கள விட்டு ஏன் போன

தாய விட்டு பிரிச்சா குழந்த அழுமாம்
ஆனா நான் அழமாட்டேன்
பிரிப்பது நீயா இருந்தா.. இப்போ
நீயே என்ன பிரிஞ்சு போயிட்டியே


முதல் மாத சம்பளத்திலேயே அப்பாவை மிஞ்சினான்
சம்பள உயர்வுகளில் அப்பப்பா சொல்ல வைத்தான்

பீட்சாவும்  பர்கரும் இல்லாமல் வாழ மறுத்தான்
இட்லியும் தோசையும் என்னவென்று கேட்டான்

மாதம் ஒருமுறை மேலாடை வாங்கினான்
வெளிநாட்டு தரத்தில் உள்ளாடை வாங்கினான்

23 வயதில் சொந்த வீடு வாங்கினான்
தவணை முறையில் சிற்றுந்தும் வாங்கினான்

வெள்ளையனை விட அழகாக அங்கிலம் பேசினான்
அமெரிக்கனுக்கே வியாபாரத்தில் வகுப்பு எடுத்தான்

எல்லாம் கிடைத்த மென்பொறியாளன்
ஏனோ smileyல் :) மட்டுமே சிரிக்கிறான்



அலை என்னும் கையால் என்னை அழைத்தாய்

நான் இன்னும் காதலிக்கவில்லை



பள்ளி பருவத்தில் ஒரு பெண்ணின் மீது
ஈர்ப்பு வந்ததே அது காதலா ?

கல்லூரி நாட்களில் ஒரு பெண்ணை மட்டும்
மிகவும் பிடித்ததே அது காதலா ?

வேலையில் சேர்ந்த போது ஒரு பெண்ணின் மேல்
பாசம் வந்ததே அது காதலா ?

அறிவு முதிர்ந்த போது ஒரு பெண்ணிடம்
நல்ல நட்பு மலர்ந்ததே அது காதலா ?

எது காதல் என்று புரியும் முன்பே
திருமணத்தை புரிந்து கொள்ள சொன்னார்கள்


குடும்ப சண்டையில்
இரு குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்

ஊர் சண்டையில்
இரு ஊரை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்

சாதி சண்டையில்
இரு சாதியினர் கொல்லப்பட்டனர்

மத சண்டையில்
இரு மதத்தினர் கொல்லப்பட்டனர்

உலக போரினில்
சில நாட்டினர் கொல்லப்பட்டனர்

நல்ல வேளை எங்கும்
மனிதர்கள் கொல்ல படவில்லை


பெரியாரை வழிபடுபவர்கள்
நாத்திகவாதிகள்

பெரியார் சொன்னதை ஏன் எதற்கு
என கேட்காமல் பின்பற்றுபவர்கள்
பகுத்தறிவாதிகள்

தன் மனைவியையும் பெண்ணையும்
தனக்கு சமமாக நடத்தாதவர்கள்
பெண்ணியவாதிகள்

சாதி பார்த்து
வரதட்சணை வாங்கி நடத்துவார்கள்
சுயமரியாதை திருமணத்தை

தன தேவைக்காக
கூன் விழும் வரை குனிவார்கள்
சுயமரியாதைவாதிகள்

பெரியார் பிறந்த பூமியில் இன்றும்
இரட்டை குவளை முறையும் ஜாதி கலவரங்களும்
நடப்பதை வேடிக்கை பார்பவர்கள்
பெரியாரிஸ்ட்கள்


எவருடைய அழுகையோ
ஒப்பாரியோ  கூட
என்னை சலனப்படுதியதில்லை


ஆனால் ஏனோ
ஊனமுற்றவர்களின் சிரிப்பு
என்னை கலங்க வைக்கிறது


Jan 6, 2011

கருணை

ஒத்த ரூபா பிச்ச போட்டு 
ஒலக வருமைய 
ஒழிசுட்டாராம் 


கார்கில் நிதிக்கு 
காசு கொஞ்சம் கொடுத்து 
காஷ்மீர காத்துட்டாராம் 


கமலா அறக்கட்டளைக்கு
காசு கொடுத்து ஒலக 
கல்வி கண்ண தொரந்துட்டாராம் 


எப்ப புரிய போகுது 
எவ்வளவு பணம் கொடுத்தாலும் 
எவனும் தெரேசா ஆக முடியாதுன்னு 


அள்ளி பணத்த தர்றதில்ல 
ஆசையா அனைக்கறது தான் 
அக்மார்க் கருணைன்னு 



கேட்டால் தான் கிடைக்கும்
தட்டினால் தான் திறக்கும்

கை ஏந்தினால் தான்

வரம் கிடைக்கும்
காலில் விழுந்தால் தான்
நல்லது நடக்கும்

என்றால் வேண்டாம்

எனக்கு கடவுள்